ஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தனையோ பப்ளிஷ் செய்யும் நிறுவனகள் வரிசை கட்டி நிற்கின்றன. எம்மவர் பலரும் எத்தனை ரூபாய் என்றாலும் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். ஆங்கில புத்தகத்தை வாசிப்பதில் அல்லது அதை வாசிப்பதாக காட்டிக்கொள்வதில் அலாதிப் பிரியம் அவர்களுக்கு.
எம்மவர் பலரும் , புத்தகங்கள் எழுதி , அவை வெறும் மண்ணோடு மண்ணாய் போகின்றன. மில்லியன் பிரதிகள் விற்பதுக்கு தகுதி இருக்கும் , புத்தகங்கள் கூட நாலு பேர்க்கு மட்டும் தெரிந்த விடய தானங்களாகி போகின்றன. ஊக்கப்படுத்தவோ , பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும் விதத்தில் அதை பதிப்பிக்கவோ யாரும் இல்லாத காரணத்தால் பலரின் கதைகள் மௌனமாகவே இருந்து விடுகிறது.
வியாபர நோக்கமாகிவிட்ட இந்த உலகில் தரமான புத்தக தேடலுக்கான ஆர்வம் இல்லாமை , இறுதியில் அந்த மொழியில் வீழ்ச்சிக்கே இட்டுச்செல்லும். இதற்கு காரணம் யார் என்னும் போது , போலியான பகட்டுக்காய் ஆங்கில மொழிக்கும் அதன் புத்தகங்களுக்கும் அடிமையாகிவிட்ட எம்மவர் மீதே அதிகம் கோவம் வருகிறது.
ஆங்கிலம் என்ற ஊடக மொழி அந்நியப்படாது போயிருக்கும் அல்லது ஆங்கிலம் என்ற அந்நிய மொழியை நான் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இன்றைய கால கட்டங்களில் கூட அங்கில புத்தகங்களுடன் எனக்கு ஒன்ற முடியவில்லை. அவை மனதோடு வாசம் செய்ய மறுக்கின்றன. வாசித்தல் , ரசித்தல், அதனோடு வாழுதல் என்ற சுகானுபவத்தை முழுமையாக தர மறுத்து விடுகின்றன. இன்னும் தமிழ் புத்தகங்களியே ஏன் அதிக தேடல் தங்கி இருக்கிறது.
வாயில் நுழையாத ஆயிரம் ஆங்கில எழுத்தாளர்களை சொல்லும் எம்மில் பலருக்கும் ராஜநாராயணன் , எஸ். ராமக்கிஷ்ணன், போன்ற எத்தனை கதை சொல்லிகளை தெரியும். மல்லிகை போன்ற உள்நாட்டு இதழ்களை தெரியும்.
ஆர்வமும் , ரசனையும் பல்வேறுபட்டு இருக்கலாம் ஆனால் , பிறந்து வளர்ந்து , பேசுகின்ற மொழியை காவு கொடுத்துவிட்டு , அன்னியத்துக்கு ஆட்படுகின்ற மனோபாவம் எப்படி எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன் தாய் மொழியில் ஒன்றை ரசிக்காது பாராட்டாது பகட்டாய் புத்தக பிரியர்களாய் காட்டும் பலருக்கும், எம் மொழியிலும் ஒரு ரசனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதும் . மொத்த வாசிப்பு பரப்பில் கால் வாசியாவது எம் மொழி படைப்புக்களில் ஆர்வம் வைப்பதும், ஆகக் குறைந்தது மொழி வளரவாவது உதவட்டுமே.